கோமா சக்தி - சிறுகதை

அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது.

கிரேக்க பழமொழி 



இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக  திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத் துவாயால் முகத்தைத் துடைத்தபடி வேலைக்காரனைப் பார்த்து வாங்கி வந்தனியா அந்தப் புத்தகத்தை என்று கேட்டதும் வேலைக்காரன் என்னவோ முடுலிங்கத்திற்கு விருது கொடுப்பவன் போல புத்தகத்தை இரண்டு கைகளும் நிமிர்த்திப் பிடித்து கொடுத்தான். முடுலிங்கத்திற்கே விருதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது என்றாலும் வேலைக்காரன் தோட்டத்தில் தானே வேலை செய்கிறான் அவனுக்கும் ஒரு தோட்ட விருதை வழங்கும் உரிமை இருக்குத்தானே.

முடுலிங்கவின் முகத் தோற்றம், வயது உயரம் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது. முடுலிங்கம் சிறுகதை எழுதும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர். நீங்கள் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு எதிரானவர் என்றாலும் இவரின் கதைகளை படிக்கலாம். அவரின் கதைகளில் சொந்த நாடு பற்றி நாட்டம், ஏக்கம் கூட இருக்காது. அவர் கண்டதையும் வாழ்ந்ததையும் எழுதும் தார்மீக எழுத்து அறம் கொண்டவர். கதைகளுக்காக முடுலிங்கம் யதார்த்தத்தில் சிறு புனைவை கொண்டு வருவாரே தவிர கதைகளையும் சம்பவங்களையும் மாற்றுவது கிடையாது. முடுலிங்கத்திடம் அயோக்கியத்தனம் கிடையாது. மகா பொய் சொல்லி தன்னையொரு           இடதுசாரி புரட்சியாளனாகவும் புரட்சியாளர்களின் சிந்தனைகளை அப்படியே பின் பற்றி நடப்பவன் போலவும் கதைக்கத் தெரியாது. தானும் புலிகள் இயக்கத்தில் இருந்தவன் என்றோ அல்லது பிரபாகரனுக்கு ஆலோசாகராக  இருந்தனான் என்றோ ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு அடையாளம் பெறவும் அவருக்கு விருப்புக் கிடையாது. அவருக்கு படிச்சதுக்கு ஏற்ற தொழில் இருக்கிறதால ஒரு பிரச்னையும் இல்லை.

அவர் சிரிச்சு முடியத் தான் வேலைக்காரன் தேத்தண்ணியைக் கொடுத்தான், முடுலிங்கம் தேத்தண்ணியை வாங்கிக் குடிச்சுக் கொண்டு வேலைக்காரனுக்கு இரண்டு அப்பிள்களை துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டதோடு பக்கம் 30ல் தொடங்கும் கோமா சக்தியின் நேர்காணலை வேலைக்காரனுக்கு வாசிச்சுக் காட்டுவதாகவும் வேகமாய் வந்து கதிரையில் இருக்கும் படியும் முடுலிங்கம் சொன்னது தான் தாமதம் வேலைக்காரனுக்கு குண்டியில அடிச்ச புளுகம். இரண்டு அப்பிளையும் தோல் சீவி துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு கதிரையில் இருந்து விட்டான். முடுலிங்கம் வீபூதியை பூச மறந்து இருக்கிறார் எண்டதையே வேலைக்காரன் சொல்லவே இல்லை. அவன்  கள்ள மவுனத்தை பூசாத வீபூதியில் பழகிக்கொண்டான். 

சுங்கப்பனை விருது புலிகள் இல்லாமல் போனதினாலேயே சாத்தியமாகியது, முடுலிங்கம் வாசிக்கத் தொடங்கும் நேர்காணலின் தலைப்பு இப்படி இருந்தது. 

நேர்காணலை முடுலிங்கம் வாசிக்கும் தொனியை என்னால் உங்களுக்கு உணர்த்தமுடியாது. அவர் ஒரு அதியுச்ச கோபத்தோடு ஒருவனை தூசணத்தால் ஏசுவதைப் போன்று வாசித்தார். அந்த நேர்காணலே உங்களுக்காக.

கே – ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தமிழர்க்கு சாதகமானதாக அமையும் தருணங்களில் கீபன் படத்தையும் எடுத்துக்கொள்ளலாமா?

கோ – புலிகள் இல்லாமல் போனதே ஈழத் தமிழர்களுக்கு சாதகமானது தானே. பாசிசத்தையும் அராஜகத்தையும் மக்கள் மீது நடாத்திக் கொண்டிருந்த புலிப் பாசிஸ்டுகள் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார்கள் என்பதை எமது தோழர்கள் கடந்த காலங்களில் சொன்னதை நான் நினைவு கூற வேண்டும். இன்றைக்கு உலகளவில் ஈழம் வல்லரசுகளின் பசியைப் போக்கவல்ல இரையாக மாறியிருக்கிறது. என்றாலும் பிரான்ஸ் மக்களிடம் ஈழத் தமிழர்கள் தொடர்பாக ஒரு இரக்கம் இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் கீபன் திரைப்படம். அதற்கு உலகளவில் உயரிய விருதான கோண் விருது வழங்கப்பட்டிருப்பது சாதகமான சூழலைத் தான் காட்டுகிறது. சுங்கப்பனை விருது புலிகள் இல்லாமல் போனதினாலேயே சாத்தியமாகியது.

கே – உண்மை தான், நீங்கள் ஒரு எழுத்தாளாராக உலகப் பெயர் பெற்றவர், புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி குறித்த இயக்கம் மீதே பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தவர். இப்பொழுது உலகப் புகழ் பெற்ற நடிகர், எதுவாக இருப்பது சுலபம்?


கோ – எல்லாவற்றுக்கு தேவை இருப்பதாகவே நான் உணர்கிறேன். புலிகளை விமர்சனம் செய்வதின் ஊடாக நான் சத்தியத்தின் பக்கம் நிற்க ஆசைப்படுகிறேன், சாதியை ஒழிக்க அரும்பாடு படுகிறேன். எழுதுவதன் ஊடாயும் இதனையே நடிப்பதின் ஊடாகவும் இதனையே செய்ய விரும்புகிறேன். நடிப்பு என்பது இங்கு கமல்ஹாசன் செய்வதோ எம்.ஜி.ஆர் செய்ததோ அல்ல, பிரான்சின் புகழ் பூத்த பெரிய நடிகரான சூர்ஜ் எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் நடிப்பு. 

கே – நீங்கள் கீபன் திரைப்படத்துக்கான கோண் விருதைப் பெற்ற அந்தத் தருணம் குறித்து சொல்ல முடியுமா?

கோ - ஒரு கதாசிரியராக எனக்கு கோண் விருது முக்கியமானது. மாபெரும் மேடையில் கீபன் திரைப்படத்துக்கு தான் பத்து நிமிடங்களுக்கு மேலே கை தட்டினார்கள், இதைவிட என்ன வேண்டும் அந்தத் தருணத்துக்கு.


கே – இந்தத் திரைப்படத்தில் நீங்கள் பல்வேறு ரீதியாக பங்களிப்பு செய்திருக்கிறீர்கள், உங்கள் இயக்குநர் ஜோக் போடியார் குறித்து சொல்லுங்களேன்? 

கோ - அவர்கள் பிரான்சின் பரம்பரை சினிமாக்காரர்கள் அவரது அம்மாவும் அப்பாவும் கூட இயக்குனர்கள் தான். படப்பிடிப்பில் ஒரு கோணத்தில் சரியான ஷாட்ஸ்களை ஓகே என்றாலும் அதே ஷாட்ஸ்சை பல தடவை வேற மாதிரி எடுப்பார்.

கே – எந்த மாதிரியான பாத்திரம் ஏற்று இந்த படத்தில் நடித்திருக்கிறீர்கள்?


கோ - நான் கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு புலிப் பாசிஸ்டாகவே நடித்திருக்கிறேன், அந்த இயக்கத்தில் நான் இருந்ததினால் எனக்கு அதனை நடிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு புலிகள் இயக்கத்தவன்  எப்படியான உடல் மொழிகளை கொண்டிருப்பான் என்றெல்லாம் எனக்குத் தெரியுமென்பதால பிரச்னை கிடையாது. 

முப்பதாவது பக்கத்தின் முடிவில் இந்தக் கேள்வி தான் இருந்தது. முடுலிங்கத்திற்கு நீண்ட நாட்களின் பின் தூசணத்தால் பேசவேண்டும் என்று தோன்றியதும் மனிசன் பிரஞ்சு தூசணம் ஒண்டை பேசினார். கோமா சக்தி ஆங்கில படமொன்றில் நடித்திருந்தால் Fuck என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு தூசணத்தை தான்  முடுலிங்கம் பேசியிருப்பார். நல்ல காலம் அது தமிழ்ப் படமாய் இருக்கவில்லை. பத்திரிக்கையை  ஸ்டூலில் வைத்துவிட்டு தட்டில் இருந்த அப்பிள் துண்டொன்றை கடித்துக் கொண்டே வேலைக்காரனையும் சாப்பிடும் படி கையால் காட்டினார். அப்பிள் துண்டை கையில் எடுத்த வேலைக்காரனுக்கு முகப்பு அட்டையை மீண்டும் ஒரு தடவை பார்த்து விடவேண்டும் போல தோன்றியது. புத்தகம் வாசிக்கப்படவிருக்கும் 31வது பக்கத்தை மடித்து குப்புற வைக்கப்பட்டிருந்தது. தட்டில் அப்பிள்கள் முடிந்து போய்விட்டதையடுத்து போத்தலில் இருந்த தண்ணியை அட்டனக்கால் போட்ட படி குடித்த முடுலிங்கம் மீண்டும் ஒரு தடவை தூசணம் ஒன்றை பேசினார். அது எந்த மொழியிலானது என்று தெரியாவிட்டாலும் அது தூசணம் தான் என்பதை வேலைக்காரன் விளங்கிக் கொண்டான். 

உள்ளி கண்ட இடத்தில பிள்ளைப் பெறும் பழக்கத்தை உலகத்துக்கு சொல்லிக் கொடுக்க இவனை விட ஆள் இல்லையெண்டு முடுலிங்கம் சொன்னதை கையில் கிடந்த கடைசி அப்பிளைக் கடிச்சுக் கொண்டே வேலைக்காரன் கேட்டுக் கொண்டேயிருந்தான். உலக வல்லாதிக்கத்தையும் காலனி ஆதிக்கத்தையும் மார்க்ஸ்சுக்கு பிறகு தான் தான் எதிர்க்கிறவன் போல கதைச்சு எழுதின நடிப்பை விட  இவன் இதில நடிக்க வாய்ப்பில்லை. மார்க்ஸ் என்றால் கா.மார்க்ஸ் என்று மீண்டும் முடுலிங்கம் அழுத்திச் சொன்னார். இரண்டு நாள் இயக்கப் பொடியளோட பேசிகுள்ள போய்ட்டு வந்திட்டு நானும் புலிகள் இயக்கத்தில இருந்தவன் எண்டு சொன்னால் நம்புறதுக்கு எல்லாரையும்  என்ன குறுப்பு பரிதி ரசிகர்கள் என்று நினைச்சிட்டார் போல,

வெளியில் அவ்வளவு கொடும்பனி பெய்து கொண்டிருந்தாலும் முடுலிங்கத்தின் முகத்தில் தீக்குழம்பு பெருகுவதை பார்த்து குட்டி ஆடு விறைத்திருப்பதைப் போல வேலைக்காரன் இருந்ததையும் அவர் பொருட்படுத்தவில்லை. குப்புற மடித்துக் கிடந்த முப்பத்தோராவது பக்கத்தை எடுத்து மீண்டும் வாசிக்கத் தொடங்கினார்.

கே – ஒரு நடிகராக ஆகிவிட்டீர்கள்? ஈழப் பிரச்னை குறித்த தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க கேட்டால் ஒப்புக்கொள்வீர்களா?

கோ – தமிழ் நாட்டு சினிமாக்காரர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்து ஒரு மொட்டையான கருத்துத் தான் இருக்கிறது. அவர்கள் சீமான் மேடைகளில் பேசுவதையே குறிப்பாக எடுத்து ஈழத் திரைக்கதையை வடிவமைக்கிறார்கள். மாபெரும் பாசிச அமைப்பான புலிகள் அமைப்பை அவர்கள் கொண்டாடத் துடிக்கிறார்கள். என்னால் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க முடியுமெனில் அது குழந்தைப் போராளிகளை பாலத்காரமாக சேர்த்தது குறித்தோ புலிகள் வழங்கிய மரணதண்டனைகள் குறித்தோ எடுக்கப்படவேண்டும். 

கே -  கீபன் திரைப்படத்தில் உங்கள் படைப்புகளில் வந்த பாத்திரங்கள் ஏதேனும் வந்திருக்கிறதா?


கோ - நான் எனது படைப்புகளில் வந்தவன் தானே. அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு திரைக்கதையில் மாற்றங்களை செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப் பட்டிருந்தது. கடைசிச் சண்டையின் போது என்னோட மட்டக்களப்பு கடைக்கு மேல ஷெல் விழுந்தது என்று ஒருவர் சொல்வதாக அந்த வசனம் இருக்கும். ஆனால் இறுதிச் சண்டை மட்டக்களப்பில் நடக்கவில்லை என்று  நான் இயக்குனரிடம் சொன்னதன் பின்னர் அந்த வசனம் மாற்றப்பட்டது. அது போல யாழ்ப்பாணச் சண்டையில 2006ம் ஆண்டு காயப்பட்டனான் எண்டு ஒரு வசனம் இருக்கும் அதையும் மாத்தினான்.1996க்கு பிறகு யாழ்ப்பாணத்தில் யுத்தமே நடக்கவில்லை. இதைப் போல என்னால் இயன்றவற்றை செய்தேன்.


கே – அடுத்து உங்களின் படைப்புத் திட்டம் என்ன நீங்கள் ஏன் ஒரு திரைப்படத்தை இயக்கக் கூடாது ? 


கோ –.  படைப்பு என்றால் அடுத்து என் நாவல் ஒன்று வெளிவரவிருக்கிறது. அதன் பெயர் Fox குதைப் புத்தகம். மிக விரைவில்  நீங்கள் கேட்பது சாத்தியமாகலாம். அப்படி இயக்கும் பட்சத்தில் ஈழத்தில் 37 முட்டாள் இயக்கங்களும் செய்த மனிதப் படுகொலைகள் குறித்தும் இஸ்லாமியர்களை புலிகள் வெளியேற்றியமை குறித்தும் ஒரு நல்ல திரைக்கதையை படமாக்குவேன்.


முடுலிங்கம் புத்தகத்தை மூடி ஸ்டூலில் வைத்தார். வேலைக்காரன் முகப்பு அட்டைப் படத்தை இன்னொரு தடவை பார்க்கிறான். அந்தப் புகைப்படத்தில் உள்ள எழுத்தாளனின் ஜெல் பூசப்பட்டு மேவி இழுக்கப்பட்ட ஒவ்வொரு தலைமயிரிலும் பேன்களைப் போல பொய் ஓடிக்கொண்டேயிருந்தது. அது ஈர்களைப் போல குஞ்சுகளைப் பொரிக்காமல் கிபிர் குண்டுகளைப் போல பொய்களைப் வெடித்துக் கொண்டேயிருந்தது. பொய்கள் அவ்வளவு பெருத்துப் போய் தலையெங்கும் ஊர்ந்து கொண்டேயிருந்தது. 

இது வேலைக்காரனின் கண்கள் தான். இந்த மயிர்,பொய் எல்லாமே அவன் சொன்ன வார்த்தைகள் தான். அவன் ஒரு அல்ஜீரியன் என்றாலும் அவனுக்கு தமிழ் அத்துப்படி.முடுலிங்கத்தோடு பதினஞ்சு வருஷம் இருந்து அவன் ஆங்கிலத்தையும் தமிழையும் கரைச்சுக் குடிச்சிட்டான். ஈழப் பிரச்சனையில இருந்து பாலஸ்தீன பிரச்னை வரைக்கும் அரசியலில மிகத் தெளிவு. பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் எழுதப்படும் புத்தகங்களில இருக்கிற சம்பவ பிழைகளையே சொல்லிக் கவலைப்படுகிற ஆள் எண்டால் பாருங்கோ. தானொரு இஸ்லாமியன் என்பதில் அவன் பெருமைப்பட்டுக்கொள்கிறவன். மேற்குலக பார்வையில இஸ்லாமியர்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர் என்பது குறித்த கவலையையும் கோபத்தையும் முடுலிங்கவோடு பகிர்ந்திருக்கிறான். அவனின் பெயரை வேண்டுமென்றால் உங்களுக்கு சொல்லலாம் முகமத் நூர். 

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் மனிதப் படுகொலைகளை செய்து இன்றைக்கு வரைக்கும் மன்னிப்புக் கேட்காத பிரான்ஸின் செங்கம்பள விரிப்பில நிண்டு கொண்டு சனநாயகம் பற்றி கதைக்கிற இவன் எல்லாம் மனிசனே கிடையாது என்று முடுலிங்கம் காலை ஸ்டூலில் தூக்கி வைத்துக் கொண்டே சொன்னார். பாலஸ்தீனத்தில் இண்டைக்கும் மக்களை குண்டு போட்டுக் கொல்கிற யூதர்களின் தேர்வில விருது வாங்கிக் கொண்டு என்னெவெல்லாம் கதைக்கிறார் எண்டு பார்த்தீரே. உலகச் சந்தைகளுக்கு படம் பண்ணிக்கொண்டு உலகமயமாதல் பற்றிக் கதைக்கிறதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம்.

முகமத் நூர் எதுவும் சொல்லவில்லை, அவன் முடுலிங்க பேசுவதை கைகளை கட்டிக் கொண்டு கேட்டபடியே இருக்கிறான். விடுதலையும் புரட்சியையும் உலகுக்கு சொல்லிக் கொடுத்த பிரான்ஸ் ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் விடுதலையை கொடுத்ததே கிடையாது நூர். எங்களுக்கு நடந்த இன ஒடுக்குமுறை குறித்து பிரான்ஸ் வாயே திறக்கவே இல்லை.இண்டைக்கு மைத்திரியை ஆதரிக்குது. மைத்திரி கீபன் விருது வாங்கியமைக்கு வாழ்த்து தெரிவிச்சு அறிக்கை விடுகிறான். அந்தப் படம் ஒரு குப்பை. மேற்குலகத்தின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு தாளம் போடுது. அதில நடிச்சுப் போட்டு இஸ்லாமிய வெளியேற்றம் குறித்து படம் பண்ணப் போறேன் எண்டு சொலுறது தான் சிரிப்பாய்க் கிடக்கு.

பிரான்ஸ்ஸில் வாழும் எல்லாம் இஸ்லாமியர்களையும் வேற்றின மக்களையும் மாபியாக்கள் எண்டு சொல்லும் படத்தில நடிச்சுப் போட்டு நாளைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் மாவோ அம்பேத்கர் பெரியார் என்று எல்லா புரட்சியாளர்களையும் புகழ்ந்து ஒரு கட்டுரை எழுதக் கூடும்.

37 ஈழ இயக்கங்கள் முட்டாள் தனமாய் இருந்தது என்றும் பிரபாகரன் பாசிஸ்ட் என்றும் கதை எழுதிக் குவிக்க இனி பிரபாகரனும் இல்லை புலியும் இல்லை. உண்மையா கொழும்பு ஆட்சியாளர்களுக்கு புலிகள் இல்லாதது அவங்கட அரசியலுக்கு எப்படி பின் அடைவா இருக்கோ அப்படி கோமா சக்திக்கும் பின் அடைவு தான். 

தமிழ்நாட்டில இவர் சொல்லுறது தான் சத்தியத்தின் தேவ வாக்காய் நம்புகிறதுக்கு இன்னும் ஆக்கள் இருக்கிறது தான் கவலையாய் இருக்கு என்று சொல்லி முடித்த முடுலிங்கவிடம் நூர் இப்படிச் சொல்லத் தொடங்கினான்.

31வது பக்கத்தில வாற கேள்வியொன்றில கடைசிச் சண்டை மட்டக்களப்பில நடக்கவில்லை எண்டு சொல்லிச் சொல்லுவதும், யாழ்ப்பாணத்தில 96க்கு பிறகு சண்டை நடக்கவில்லை எண்டு சொல்லுவதும் சரியான பிழை. கடைசிச் சண்டை என்று இவர் நினைக்கிறது மே -18ம் திகதியைப் போலத் தான் கிடக்கு.  கிழக்கு மாகாணத்தில இருந்து தானே கடைசிச் சண்டையை மகிந்த தொடங்கினவன். 96க்கு  பிறகு யாழ்ப்பாணத்தில சண்டை நடக்கவில்லை எண்டு சொல்லுறார். உண்மையா இவர் சிறிலங்காவின் மூன்று மூன்று சனாதிபதிகளுக்கு ஒழுங்கே சந்திரிக்கா ,மகிந்த ,மைத்திரி என்று உலகளவில் சனநாயக சாயம் பூசுறார்.  அவருக்கு விருது வாங்கவேணுமெண்டு ஆசை உங்களுக்கு விருது குடுக்க வேணுமெண்டு ஆசை. நீங்கள் இந்த சம்பவத்தை வைச்சு ஒரு கதை எழுதுங்கோவன் என்றான் நூர்.

நூரின் வேண்டுகோளின் படி முடுலிங்கம் எழுதிய கதை இந்தக் கதை தான், ஆனால் தலைப்பு மட்டும் நான் வைத்துக் கொண்டது.


Comments

  1. நல்ல பணி..
    மறக்கப்பட்ட உண்மைகள்
    மறைக்கப் பட முடியாதுதானே

    ReplyDelete
  2. அருமை.. 23ம் புலிகேசி நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை வரலாறுகளின் மீது ஒரு அச்சம் பரவுகிறது உண்மையிலேயே ஹிட்லர் கொடியவர் தானா ராமனும் கிருஷ்ணரும் அத்தனை யோக்கியமானவர்களா 18ம் முறை கஜினி படையெடுத்து வந்த போது போர் செய்ய அங்கு ஏதேனும் நாடு இருந்ததா.... இலங்கையில் தமிழர்களின் கொடியை மீண்டும் ராஜபக்சேவால் ஏற்றப்பட்டதாய் செய்தித்தாளில் என் பேர்த்தியோ பேரனோ வாசிக்கும் போது செத்துப் போன நரம்புகளை வைத்துக் கொண்டு என்ன செய்யவியலும் என்னால்...

    ReplyDelete
  3. நிதர்சனமான கதை...

    ReplyDelete
  4. படித்தேன்.
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்